கடந்த 2021 சட்டசபை தேர்தலில், வேளச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது; ஸ்ரீபெரும்புதுாரில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வென்றார்.
இந்த முறை எழும்பூர் அல்லது பூந்தமல்லி தொகுதியை அவர் கேட்பதாக கூறப்படுகிறது. கூட்டணியை காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்த அவரது வேண்டுகோளை, நிராகரிக்க முடியாத நிலையில் தி.மு.க., உள்ளது. மேலும், தி.நகர் தொகுதியையும் காங்கிரஸ் கேட்கிறது.
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் தி.மு.க., தவிக்கிறது.
மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன், பெரம்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அவருக்காக பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மா.கம்யூ., கேட்கிறது.
இது தவிர, ஆர்.கே.நகர் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. சென்னையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதை தவிர்த்து வரும் தி.மு.க.,வுக்கு, இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.