எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்கு தேவையான எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருண தெரிவித்தார்.எரிபொருள் விநியோகம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பை சிறந்த முறையில் பேணுவதற்காகவே எரிபொருள் விலை தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்தால் அதன் உச்சபயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்கு தேவையான எரிபொருள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சனிக்கிழமை (14) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு 02 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன. இவற்றில் 35ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெற்றிக்தொன்வரையான டீசல் மற்றும் பெற்றோல் தொகை அடங்குகின்றன.இந்த எரிபொருள் தொகை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய நெருக்கடியான நிலையில் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.