”தே.மு.தி.க.’வால் தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; விரைவில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும்,” என, தே.மு.தி.க. பொதுச் செயலர் பிரேமலதா கூறினார்.
தனது 60வது பிறந்த நாளையொட்டி, சென்னை – சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில், பிரேமலதா ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
அதன் பின் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின், மொபைல் வாயிலாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். ‘மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., கட்சிகள், வி.சி.,க்கள் உடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் முடிக்கப்படும்’ என, முதல்வர் கூறினார். அதன் பிறகு, விரைவில் தே.மு.தி.க.,வை அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்திருப்பதால், ஏற்கனவே கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு, தொகுதிகள் குறைத்து தரப்படுவதாக கூறப்படுவது தவறு. எங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; கூட்டணி உறவு சுமுகமாக உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்து பிரசாரத்தை துவங்க உள்ளோம்.
அ.தி.மு.க., – எம்.பி., சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து மிகவும் அநாகரிகமாக பேசியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வியை, அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் கேட்டால் ஏற்றுக் கொள்வாரா? யாராக இருந்தாலும், பெண்களுக்கு எதிராக பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால், பெண்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.