
கிட்டத்தட்ட சென்னையைப் போல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிட்டனுக்குச் சொந்தமான தொலைதூரத்தில் இருக்கும் தீவு ஒன்றின் மீது மோதும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அங்கு வாழும் பென்குயின்கள் மற்றும் சீல்களை ஆபத்தில் தள்ளக்கூடும்.
இந்தப் பெரும் பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் அது தெற்கு ஜார்ஜியாவை நோக்கிச் சுழன்று நகர்கிறது.
அதுவொரு கரடுமுரடான நில அமைப்பைக் கொண்ட, பென்குயின் போன்ற பல விலங்குகள் வாழும் பிரிட்டிஷ் தீவு. அதன்மீது மோதுவதால், இந்தப் பனிப்பாறை பல துண்டுகளாக நொறுங்கக் கூடும். தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து, பனிப்பாறை தற்போது 280 கி.மீ தொலைவில் இருக்கிறது. சென்னை போல 4 மடங்கு பெரிதான இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோதினால் என்ன நடக்கும்?
கடந்த காலங்களில் இத்தகைய பெரும் பனிப்பாறைகள் இந்தத் தீவு மீது மோதிய போது, தெற்கு ஜார்ஜியாவில் இருந்த எண்ணற்ற பென்குயின்களும் சீல்களும் நீர்நாய்களும் உணவு கிடைக்காமல் உயிரிழந்துள்ளன.
“இயல்பாகவே பனிப்பாறைகள் ஆபத்தானவை. தீவின் மீது மோதாமல் அந்த பனிப்பாறை பாதை மாறிச் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று தெற்கு ஜார்ஜியாவின் அரசாங்க கப்பலான ஃபரோஸில் இருந்து பேசுகையில், அதன் கேப்டன் சைமன் வாலேஸ் பிபிசியிடம் கூறினார்.
பகிரவும்: