அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை (20.09.2025) பத்திரமாக மீட்டுள்ளனர்.

நீர் தேங்கிய பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை கவனித்து பொது மக்கள் அக்கரப்பத்தனை பொலிஸார் மூலம் நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் சிறுத்தையை உயிருடன் பாதுகாப்பாக வலையில் போட்டு மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இதனை சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
எவ்வாறாயினும் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்து உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.