புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கட்டளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

மருத்துவ அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால் கடற்படை வீரரையும் கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் காங்கேசன்துறை பொலிஸார் ஒப்படைத்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *