
07.03.2025 – சிவகாசி
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜனை, மற்றொரு மாஜி அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் மாஜி அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜனும் கலந்து கொண்டிருந்தார்.
விழாவில், அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அருகே இருந்த மாபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்க சென்றபோது அதை தடுத்து, அவரின் கன்னத்தில் ராஜேந்திர பாலாஜி அறைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந் நிலையில், சிவகாசியில் அ.தி.மு.க., கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பேசிய மாஜி அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜனை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அவர் பேசியதாவது;
இத்தனை பேரை வேலையில்லாமலா போட்டு இருக்கேன். குறுநில மன்னர் என்கிறான். ஆமாம், நான் குறுநில மன்னர் தான். அ.தி.மு.க.,வை எதிர்க்கும் தி.மு.க.,வுக்கு நான் குறுநிலமன்னர்தான். என்னுடன் உள்ளவர்கள் எல்லாரும் வாள் ஏந்தி வருவார்கள்.
தி.மு.க., எதிரி என்று எடப்பாடியார் சொல்லிவிட்டார். நீ (மாபா பாண்டியராஜன்) ஏன் வருகிறாய் குறுக்கே? நான் எம்.ஜி.ஆர்., தொண்டன். அதி..மு.க., ரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.
உனக்கு (மாபா பாண்டியராஜன்) எந்த ரத்தம் ஓடுது? நீ முதலில் காங்கிரஸ், அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ், அப்புறம் பா.ஜ, அடுத்து தே.மு.தி.க., அடுத்து அ.தி.மு.க.,, அப்புறம் ஓபிஎஸ், மறுபடியும் அ.தி.மு.க., வெட்கமாக இல்லை உனக்கு?
உனக்கு சால்வை போடும் போது வேடிக்கை பார்க்க நான் என்ன கிறுக்கனா, தொலைச்சுடுவேன். நீ வந்து என்னோடு போட்டி போடுகிற, யார்ரா நீ? என்னை எதிர்த்தாலும் அவர்களை மதிக்கக் கூடிய பண்பு என்னிடம் இருக்கு. நீ யாரு? இயக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு ஓடினாய்.
நான் தெய்வமாய் மதிக்கும் ஜெயலலிதா பற்றி நீ அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் இருக்கு. உன் மீது ஒரு வழக்கு வந்துச்சுன்னா, அடுத்த நொடியே கட்சியை விட்டுட்டு ஓடி விடுவாய். தமிழ்நாடு காவல் துறை என்னை டில்லி வரை தேடியது. நான் மண்டியிட்டனா? ஒளிஞ்சுகிட்டு என்னை காப்பாத்துங்க என்று யாரிடமாவது கைகட்டி நின்றிருக்கேனா?
இவ்வாறு அவர் ஆக்ரோஷமாக பேசினார்.
பகிரவும்: