
14.03.2025 – வாஷிங்டன்
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற மறு நொடியில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். முதலில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்தது. பின்னர் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் டிரம்ப் கவன்ம் செலுத்தினார். தற்போது அவர் அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். தற்போது அவரது கவனம் மதுபானங்கள் மீது திரும்பி உள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்காவிலும் வரி அதிகரிக்கப்படும். எனவே ஐரோப்பிய யூனியன் இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும்.
இல்லையென்றால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வரும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும். இந்த அதிகப்படியான வரி விதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்திற்கு பயன் அளிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
பகிரவும்: