
18.03.2025 – புதுடில்லி
கிராமப்புற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உத்தரவாதமான வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து ராஜ்யசபாவில் பூஜ்ஜிய நேரத்தில் பிரச்னை எழுப்பி சோனியா பேசியதாவது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக தேக்கமடைந்துள்ளது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்
ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் உண்மையில் ரூ.4,000 கோடி குறைந்துள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறைக்கு மத்தியில், கிராமப்புற தொழிலாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குவதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தத் திட்டத்தை மேம்படுத்துவது கிராமப்புற மக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும்.
திட்டத்தை நிலைநிறுத்தவும் விரிவுபடுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.400 அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். உத்தரவாதமான வேலை நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100 லிருந்து 150 ஆக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா பேசினார்.
பகிரவும்: