சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; நூற்றுக்கணக்கான காகங்கள் இறக்கின்றன.

சென்னை

சென்னையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காகங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் பீஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட காகங்கள் கொத்து கொத்தாக செத்து கிடந்தன. இதன் மாதிரியை எடுத்து ஆய்வு செய்ததில், ஏவியன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைப் போலவே சென்னையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த காகத்தை எடுத்து ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியை சுகாதாரத்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து, நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பறவைகளைத் தொட வேண்டாம் என்றும், பறவைகள் உயிரிழந்து இருப்பதைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், உயிரிழக்கும் கோழி உள்ளிட்ட பறவைகளை, சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதலின்படி, எரிக்க வேண்டும் அல்லது ஆழமாகப் புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

பறவைக் காய்ச்சல் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்த பாதிப்பைத் தடுக்க விரிவான கள ஆய்வுகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply