ஓலா, உபர், ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
புதுடில்லி

கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா,உபர் மற்றும் ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் நாளை (பிப்ரவரி 7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
‘ஆல் இந்தியா பிரேக் டவுன்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம் (Telangana Gig and Platform Workers Union) மற்றும் பிற தேசிய தொழிற்சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், ஆட்டோக்கள், டாக்ஸிகள் மற்றும் பைக் டாக்ஸிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகக் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களே தன்னிச்சையாகக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. இதன் காரணமாக, போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, அவர்கள் வறுமைக்கும் தள்ளப்படுகின்றனர்.வணிக ரீதியிலான பயணங்களுக்கு வெள்ளை நிறப் நம்பர் பிளேட் கொண்ட தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.