தேர்வுகளின் போது சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தவிர்க்குமாறு இந்தியப் பிரதமர் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
புதுடில்லி

”படிப்பை சுமையாக நினைத்து அரை மனதுடன் படிக்காதீர்கள்; முழு ஆர்வத்துடன் படியுங்கள். அப்போது தான் வெற்றி கிடைக்கும். பரீட்சையில் மார்க் முக்கியமல்ல; வாழ்க்கையில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதே முக்கியம். ‘இன்டர்நெட் டேட்டா’ மலிவாக கிடைக்கிறது என்பதற்காக, ‘ஆன்லைன்’ விளையாட்டில் மூழ்கிவிடாதீர்கள்; அதிலிருந்து விலகியிருங்கள்,” என, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
நாடு முழுதும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.
தொடர்ந்து 9வது ஆண்டாக நடக்கும் இந்நிகழ்வில், குஜராத்தின் தேவ்மோர்கா, தமிழகத்தின் கோவை, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், அசாமின் குவஹாத்தி மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் நேரில் பங்கேற்றனர்.
நாடு முழுதும் உள்ள மாணவர்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக நிகழ்ச்சியை கண்டனர்.
டில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவர்களை, அசாமின் பாரம்பரிய ‘கமோசா’ துண்டு அணிவித்து பிரதமர் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
படிப்பை மாணவர்கள் சுமையாக கருதக் கூடாது. அரை மனதுடன் படிக்காமல் முழு கவனத்துடனும், உற்சாகத்துடனும் படிக்க வேண்டும். அரைகுறையாக படிப்பதால், வாழ்வில் வெற்றி பெறுவது கடினமாகும்.
அதே சமயம், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளை விட, வாழ்க்கையில் என்னவாக போகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என்ன சொன்னாலும், அதை பற்றி கவலைப்படாதீர்கள். உங்களுக்கு என தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் இருந்து வரும் அறிவுரைகளையும் சிந்தித்துப் பாருங்கள்.
எட்டும் துாரத்தில் நமக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதே சமயம், அது எளிதாக அடைந்துவிடக் கூடியதாக இருக்கக் கூடாது.
சிந்தனையை ஒருமுகப்படுத்துங்கள். தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் எந்த பாடத்தை படிக்க வேண்டும் என்பதை தீர்க்கமாக முடிவு செய்யுங்கள். இதன் மூலம் வெற்றிகரமான மாணவராக நீங்கள் மாறுவீர்கள்.
மாணவர்களுக்கு விளையாட்டு என்பது மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். நம் நாட்டில் இணையதள ‘டேட்டா’ மலிவாக கிடைக்கிறது என்பதற்காக, சமூக வலைதளங்கள், ஆன்லைன் வீடியோ விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடக் கூடாது.
இது நம் எதிர்காலத்தையே நாசமாக்கிவிடும். நம் நாட்டில் சூதாட்டங்களுக்கு இடமில்லை. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக நான் சட்டம் இயற்றி இருக்கிறேன்.
விளையாட்டு என்பது ஒரு கலை. விளையாட்டில் இருக்கும் திறன்களை கற்றுக் கொள்ளுங்கள். அது நம் சுயவாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உதவும்.
கடந்து சென்றதை பற்றி என்றுமே நான் கவலைப்பட்டது இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி தான் அக்கறை கொள்வேன்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முக்கியமான கேள்விகளை ஆசிரியர்கள் குறித்து கொடுப்பது வழக்கம். அதே போல், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையானவற்றையும் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்.
நான் பிரதமரானதும், எப்படி பணியாற்ற வேண்டும் என நிறைய பேர் எனக்கு அறிவுரை வழங்கினர். ஆனால், ஒவ்வொருவருக்கும் தனி பாணி இருக்கிறது.
சிலர் காலையில் படிப்பர். சிலர் இரவில் படிப்பர். உங்களுக்கு எது பொருந்துகிறதோ அதை நம்புங்கள்; பின்பற்றுங்கள்.
அதே சமயம் நல்ல அறிவுரைகளையும் கேட்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். நல்ல அறிவுரைகளை பின்பற்றுவதால், வாழ்வை நல்ல முறையில் கட்டமைத்துக் கொள்ளலாம்.
படிப்பு, ஓய்வு, திறமை, பழக்கவழக்கம் என அனைத்திலும் ஒரு சமநிலை அவசியம். அது தான் வளர்ச்சிக்கான முக்கிய துாண்டுகோல். இரு திறன்கள் இருக்கின்றன. ஒன்று வாழ்க்கை திறன் மற்றொன்று பணித் திறன். இரண்டையும் சரிசமமாக பயன்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பார்லி.,யில் உள்ள பால யோகி அரங்கில் பிரதமரின் உரை திரையிடப்பட்டது. கடந்த ஆண்டு 3.53 கோடி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
தற்போது நடந்த நிகழ்ச்சியில் 4.5 கோடி மாணவர்கள் பங்கேற்றதன் மூலம், முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.