தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள், நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விமான நிலையத்தில் பணியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் பயணியரை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன் தாய்லாந்து நாட்டில் இருந்து உயர் ரக கஞ்சா சென்னைக்கு கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், குறிப்பிட்ட விமானங்களையும், பயணியரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திருந்த நான்கு பயணியரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், உடைமைக்குள் 15 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 15 கோடி ரூபாய்.
இதேபோல, ‘தாய் ஏர்வேஸ்’ விமானம் சென்னைக்கு வந்தது. அதில் சந்தேகிக்கும்படி வந்த இரு இளைஞர்களிடமும், அவர்களை உடைமைகளையும் சோதனை செய்தனர். இதில், 10 கிலோ உயர் ரக கஞ்சா சிக்கின. அவற்றின் மதிப்பு 10 கோடி ரூபாய்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு நாட்களில், ஆறு பேரை கைது செய்த சுங்கத்துறை மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.