மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு | 08.02.2005
08.02.2005

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09.02.2005.
தமிழ் மக்களின் விடிவையும் தமிழீழ மண்ணின் விடுதலையையும் தனது வாழ்வின் அதியுன்னத இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழர் தேசம் இன்று இழந்துவிட்டது. தமிழ் மக்களது உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று அடங்கிவிட்டது. பகைவனின் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஒரு தமிழினப் பற்றாளர் பலியாகிவிட்டார்.
திரு அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் தன்னலம் அகன்ற மனிதநேயம்மிக்க ஒரு பொதுநலவாதி, தமிழீழ மண் தந்த தலைசிறந்த ஒரு மனிதஉரிமை ஆர்வலர். புரட்சிகரமான ஒரு அரசியல்வாதி. அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துகொண்ட ஒரு உயரிய பண்பாளர், இவரது சாவு தமிழர் தேசத்திற்கு ஒரு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.
அம்பாறை மண்ணோடும் அந்த மண்ணின் மக்களோடும் ஒன்றியதாகவே அவரது வாழ்விருந்தது. சிங்களப் படைகளின் தமிழின அழிப்புப் போர் உச்சம்பெற்றிருந்த நாட்களிலும் போர்ஓய்வு நிலவுகின்ற இன்றைய நாட்களிலும் அந்த மண்ணோடும் அந்த மக்களோடும் இணைந்துநின்று, அனைத்துக்கும் முகம்கொடுத்தார். சிங்களப் படைகள் அம்பாறை மண்ணில் புரிந்த அழிவுகளையும் அட்டூழியங்களையும் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். சிங்களப் படைகளின் இடைவிடாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான துணிச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார். வடக்குகிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து, தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஓயாது உழைத்தார். தமிழ் மக்களது போராட்ட நியாயங்களையும் நியாயப்பாடுகளையும் தெட்டத்தெளிவாக உலக அரங்குகளில் எடுத்துக்கூறினார். இவரது அரும்பணி என்றும் பாராட்டிற்குரியது.
திரு அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

