காலத்தை காத்தவர்கள் அல்ல — காலத்தை உருவாக்கியவர்கள்
ஈழத்து நிலவன்

காலம் வருமென
கைகளை கட்டி
காத்திருந்த பெண்கள் அல்ல இவர்கள்,
எமக்கான காலத்தை
நாங்களே உருவாக்க
களம் நோக்கி நடந்தவர்கள்.
அடக்குமுறையின்
ஒவ்வொரு கட்டளைக்கும்
தலைகுனிய மறுத்து,
ஒவ்வொரு “ஆணைக்கும்”
எதிராக
ஒரு வரலாற்று
“இல்லை” என
நெஞ்சம் நிறுத்தியவர்கள்.
அடுப்படிக்குள் அடக்க
சமூகம் திட்டமிட்டபோது,
அக்னியாக மாறி
அரசியல் மேடையே
அதிர வைத்தவர்கள்.
“பெண் என்றால்
பொறுமை தான்
அடையாளம்”
என்ற பொய்யை,
இரத்தம் சிந்தி,
உண்மையால்
சிதைத்தவர்கள்.
அவர்கள் காலடி
மண்ணில் பதிந்ததல்ல—
ஆக்கிரமிப்பின் மார்பில்
பதிக்கப்பட்ட
தீர்ப்புகள்.
பயம் அவர்களை
தொடர வந்தபோது,
அவர்கள்
பயத்தையே
பின்னால் இழுத்துச்
சென்றார்கள்.
போராட்டம்
ஆண்களின் சொத்து அல்ல
என்று
வரலாற்றின் முகத்தில்
உச்சரித்த
பெண்கள் இவர்கள்.
மரணம் கூட
அவர்களை
மௌனப்படுத்த முடியவில்லை,
ஏனெனில்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஆயிரம் எழுச்சிகளாக
மாறியது.
அவர்கள் சுமந்தது
ஆயுதம் மட்டும் அல்ல—
ஒரு தேசத்தின்
மூச்சு,
ஒரு இனத்தின்
மரியாதை,
ஒரு மொழியின்
உயிர்.
பெண்ணியத்தை
போராட்டத்திலிருந்து
பிரிக்க நினைத்த
அனைத்து அரசியல்களுக்கும்
அவர்கள் பதில்—
புரட்சி தான்
எங்கள் அடையாளம்.
இவர்கள்
இறந்த பெண்கள் அல்ல,
இன்றும்
அடக்குமுறையை
தூக்கிலேற்றும்
வரலாற்றுச் சாட்சிகள்.


எழுதியவர்: ஈழத்து நிலவன்