ஜாமின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை, தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 2016 – 21 வரையிலான அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ‘ஆவின்’ நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், 2022 ஜன., 12ல் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தை நாடி ஜாமினில் தளர்வுகளை அவர் பெற்று வந்தார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு தான் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்.

எனவே ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமின் விஷயத்தில் அவர் கேட்ட தளர்வுகளை தற்போது வழங்க முடியாது’என, உத்தரவிட்ட நீதி பதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply