இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலங்கையில் 600க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி(HIV) தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 13 இறப்புகள்.
17-12-2025 | இலங்கை
நாளாந்தம் அடையாளம் காணப்படும் புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் செல்வதுடன், இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 600 க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்படும் புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை கவலைக்கிடமான வகையில் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 600 க்கும் அதிக எண்ணிக்கையிலான புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நோய்த் தொற்றுக் காரணமாக 13 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. கடந்த வருடம் முதல் ஒன்பது மாதங்களில் 605 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கண்டறியப்பட்டுள்ள நோயாளர்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்ட 68 ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஏனையத் தொற்றாளர்கள் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். இந்த ஆண்டு பதிவாகியுள்ள ஆண் மற்றும் பெண் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆறுக்கு ஒன்றாக காணப்படுவதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.