கிவுல் ஓயா எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நெடுங்கேணி

அரசினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் வவுனியா வடக்கினை சேர்ந்த பொது அமைப்புக்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து நெடுங்கேணியில் செவ்வாய்க்கிழமை (27.01.2026) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் தொடர்பாக கலந்துகொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. வவுனியா வடக்கின் பொதுஅமைப்புக்களின் வேண்டுகோள், ஆலோசனையின் பிரகாரம் முன்னதாக எதிர்வரும் 30.01.2026 வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எதிர்வரும் 02.02.2026 திங்கட்கிழமை மேற்கொள்வதாக இணக்கப்பாடு எட்டப்பட்டு தீர்மானம் இறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை (02.02.2026) நெடுங்கேணி பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கூட்டத்தில் வவுனியா வடக்கை சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், து.ரவிகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்