இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்க வரிகள் 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
டெல்லி, இந்தியா – 03 பிப்ரவரி 2026
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும், நேற்று இரவு தொலைபேசியில் பேசி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தனர்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வந்தது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் ஆத்திரம் அடைந்த அதிபர் டிரம்ப், ஏற்கனவே இருந்த 25 சதவீதம் வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதித்தார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களின் மீதான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக இருந்தது.
இந்த வரி விதிப்பை குறைக்கவும், இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தவும் தொடர்ந்து பலமுறை பேச்சு நடத்தப்பட்டது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். பிரதமர் மோடியுடன் பேசியதை சமூக வலைதளத்தில் அறிவித்த அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்
அத்துடன் இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் அறிவித்தார். அதுமட்டுமின்றி, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்ட கூடுதல் வரி 25 சதவீதம் முற்றிலும் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான மொத்த வரி விதிப்பு, 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டார். 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி அந்த பதிவில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.