இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை.
தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது.
இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்.