அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும். – ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு

முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மால் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட்சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதன்போது உறுதியளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் நேற்று புதன்கிழமை (11-02-2026) இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 27.01.2026அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வலைஞர்மடத்தில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு தம்மால் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக அங்கு தற்போது கசிப்பு உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவில் வெள்ளைப்பள்ளம் கிராமத்திலும், முல்லைத்தீவு பொலிஸ்பிரிவில் கள்ளப்பாடு தெற்கு மற்றும் செம்லைக் கிராமங்களிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தம்மிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், குறித்த கிராமங்களில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த பகுதிகளில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்தார்.