பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர், நாட்டின் ஆன்லைன் பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தளங்களுக்கு எதிராக விரிவான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். குழந்தைகளை தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், பிரிட்டனின் டிஜிட்டல் கொள்கை துறையில் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகின்றன.
“எந்த தளத்துக்கும் சலுகை இல்லை” — ஸ்டார்மர்
புதிய நடவடிக்கைகளை அறிவித்த ஸ்டார்மர், “சட்டவிரோத அல்லது ஆபத்தான உள்ளடக்கத்தை தடுக்க தவறும் எந்த தளத்துக்கும் இனி சலுகை இல்லை” என்று எச்சரித்தார்.
அரசு, குறிப்பாக AI சாட்பாட்கள் சட்டவிரோதமான அல்லது பாலியல் சார்ந்த படங்களை உருவாக்கும் loopholes-ஐ மூடுவதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வர உள்ளது.
சமீபத்தில் எலான் மஸ்க் உருவாக்கிய Grok சாட்பாட் மூலம் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய AI படங்கள், இந்த நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பு?
அரசு மார்ச் மாதத்தில் தொடங்கும் ஆலோசனையில் பல முக்கிய பரிந்துரைகளை பரிசீலிக்க உள்ளது. அவை:
- சமூக ஊடக பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச வயது 16 என நிர்ணயித்தல்
- முடிவில்லா ஸ்க்ரோல் (infinite scroll) அம்சத்தை கட்டுப்படுத்தல்
- குழந்தைகள் VPN மூலம் அசிங்கப் படங்களை அணுகுவதைத் தடுக்குதல்
- சிறார்களுக்கு AI சாட்பாட் அணுகலைத் தடை செய்தல்
ஆஸ்திரேலியா ஏற்கனவே 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்துள்ள நிலையில், பிரிட்டனும் அதே திசையில் நகர்கிறது.
‘ஜூல்ஸ் சட்டம்’: துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவு
அரசு முன்மொழியும் மற்றொரு முக்கிய நடவடிக்கை ‘ஜூல்ஸ் சட்டம்’.
இது, இறந்துபோன குழந்தைகளின் சமூக ஊடக தரவுகளை தானாகவே பாதுகாக்க நிறுவனங்களை கட்டாயப்படுத்தும்.
2022-ல் 14 வயது ஜூல்ஸ் ஸ்வீனி மரணித்ததையடுத்து அவரது தாய் எலன் ரூம் தொடங்கிய பிரச்சாரத்திற்குப் பிறகு இந்த சட்டம் உருவாகியுள்ளது.
அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆதரவு
இந்த நடவடிக்கைகள் லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளின் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளன.
உலகளவில் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்கள் உருவாகும் சூழலில், பிரிட்டனின் இந்த முடிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டனின் டிஜிட்டல் பாதுகாப்பு கொள்கையில் திருப்புமுனை
இந்த அறிவிப்புகள், குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் நாடுகளின் வரிசையில் பிரிட்டனை முன்னணிக்கு கொண்டு செல்கின்றன.
அரசு விரைவில் ஆலோசனையை முடித்து, சட்ட மாற்றங்களை “மாதங்களுக்குள்” செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஸ்டார்மர் கூறியதுபோல், “ஆன்லைன் பாதுகாப்பில் பிரிட்டன் பின்தொடர்பவராக அல்ல, முன்னோடியாக இருக்க வேண்டும்” என்பது அரசின் நோக்கம்.