இலங்கை முதன்மை செய்திகள் இலங்கையின் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,000ஐத் தாண்டியுள்ளது. Amizhthu21 February 2026025 views National Drug Eradication Program நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை வலுவிழக்கச் செய்தல், போதைப்பொருளுக்கான கேள்வியை இல்லாமல் செய்தல், நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, அதன் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வியாழகிழமை (19-02-2026) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 764 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 766 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்திருந்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 3 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய அமைய இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 100247சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 524 கிலோ கிராம் ஹெரோயின், 1416 கிலோ கிராம் ஐஸ், 3506 கிலோ கிராம் கஞ்சா, 199 கிலோ கிராம் குஷ், 121 கிலோ கிராம் ஹசிஸ், 239 கிலோ கிராம் மதனமோதகம், 169 மாவா, 11 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 932976 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 137 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1973 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது. மேலும் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1639 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.