நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்: ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணை!

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, அம்மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில், ஏப்., 20ல் விசாரணைக்கு வர உள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சங்கீதா, 48. இவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். இவரும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரும், தமிழ் திரைப்பட நடிகருமான விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் நிச்சயதார்த்தம், 1998, ஜூலை 10ல் லண்டனில் நடந்தது; அங்கேயே பதிவு திருமணமும் செய்தனர். அதன்பின், 1999 ஆகஸ்ட் மாதம், சென்னையில் விஜய் – சங்கீதாவின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 25 வயதில் மகன், 20 வயதில் மகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விஜயும், சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் கணவரான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 24ம் தேதி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தங்களுக்குள் நடந்த திருமணத்தை, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இம்மனு, அம்மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சங்கீதா தாக்கல் செய்த மனு மீது, ஏப்., 20ம் தேதி விசாரணை நடக்கிறது. அன்று இருவரும் ஆஜராவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகை ஒருவருடன், விஜய் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நடிகையுடன், விஜய் வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வருவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது, சங்கீதாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதால், விவாகரத்து கேட்டு மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும், விஜய் அந்த நடிகையுடன் இருக்கும் படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இவை, தனக்கும் குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும், பொருளாதார ரீதியாக தனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கருதிய சங்கீதா, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!

இந்திய–இலங்கை ஒப்பந்தமும் இறையாண்மை நெருக்கடியும் (1987–1990) (பாகம் 3)

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.