அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான ‘கிரீன் கார்ட்’ இல்லாத காரணத்தினால், அங்கு தங்கியிருந்த 06 இலங்கையர்கள் அந்த நாட்டு அரசினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (28-02-2026) அதிகாலை 12 மணியளவில் அமெரிக்காவிற்குச் சொந்தமான OAE-4013 என்ற விசேட விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த விசேட விமானத்தில் இலங்கையர்கள் 6 பேருடன் சேர்த்து, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 162 பேர் இருந்துள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்கவில் இறக்கப்பட்டதன் பின்னர், குறித்த விமானம் நேபாளத்தின் காத்மண்டு நகரை நோக்கிப் பயணித்துள்ளது.
திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நெடுந்தீவு மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் கீழ் இந்த நாடு கடத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரது மனைவியும், அவர் அண்மையில் பிரசவித்த குழந்தையும் இன்னமும் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 6 பேரும், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின்போது, இவர்கள் இலங்கையில் எவ்விதமான குற்றச் செயல்களுடனும் தொடர்புபடாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.