திருநெல்வேலியில் முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
நாடு போற்றும் அருந்தலைவரின் மணிமண்டபத்தில் எந்தவொரு பயமுமின்றி துணிகரமாக குண்டு வீசும் அளவிற்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது வெட்கக்கேடானது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன்னிரு கண்களாகக் கொண்டு போற்றிய மாபெரும் தலைவரின் புகழை அழிக்க முயற்சித்த இந்த இழிசெயலைத் தடுப்பதை விடுத்து, முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏவல்துறை மிதந்து கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இனியும் காலதாமதம் செய்யாமல், திமுக அரசு உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முனைந்த சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.