நுண்கடன் திட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் இலங்கையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் சட்டமியற்றாது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் நிபுணராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம் கலக்கமடையவில்லை. எதிர்க்கட்சிகள் இன்று கலக்கமடைந்து மக்களை குழப்பமடையச் செய்கின்றன.போலியான விடயங்களை குறிப்பிட்டு மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அல்லது மக்களுக்கு எதிரான வகையில் சட்டமியற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கம்.

மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போது கட்டம் கட்டமாக திருத்தம் செய்யப்படுகின்றன. மக்களுக்கு இணக்கமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.இதன் ஒரு அங்கமாகவே நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வறுமை நிலையில் உள்ள நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டே இந்த நுண்கடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். நுண்கடன் திட்டம் குறித்து கடந்தகால அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

நுண்கடன் திட்டங்களை முறையாக கண்காணிக்கும் வகையில் தான் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் இருந்து எதிர்க்கட்சியினர் விடுபட வேண்டும். மக்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட போவதில்லை என்றார்.

Related posts

முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர், நேபாளத்தில் இன்று வரலாற்று சிறப்புமிக்க பொதுத் தேர்தல்.

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய கேமரா சீனாவில் வாங்கப்பட்டது – NIA

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனிக்கு, தெஹ்ரானில் மூன்று நாள் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.