தமிழகத்தில், 12 இடங்களில் நீர்வளத்துறை சார்பில், ஆற்று மணல் குவாரிகள் இயங்கி வந்தன. குவாரிகளில் இருந்து யார்டுகளுக்கு மணல் அள்ளிப்போட ஒப்பந்த தாரர்கள் இருந்தனர்.

அவர்கள் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் செயல்பட்டு வந்த குவாரிகளுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதனால், நீர்வளத்துறை சார்பில், எந்த இடத்திலும் ஆற்று மணல் குவாரிகள் செயல்படாத நிலை ஏற்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு, ஆற்று மணல் தேவை அதிகரித்த நிலையில், அதில் ஒரு பகுதியை, ஆந்திராவில் இருந்து வரும் மணல் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரச்னை ஏற்பட்ட இடங்களை தவிர்த்து, 30 புதிய இடங்களில், மணல் குவாரி அமைக்க நீர்வளத்துறை முடிவு செய்தது.
இதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி, எந்த இடத்திலும் மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை. கடந்த மாதம் எட்டு இடங்களில் குவாரிகள் திறக்க, அதிகாரிகள் தயாராகினர்.
துறை அமைச்சரின் தலையீட்டால், அதுவும் தடைபட்டது. இதனால், மணல் குவாரிகள் திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
மணல் அள்ளிப்போடும் ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதில், துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே, ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பழைய ஒப்பந்ததாரர் தொடர, அமைச்சர் வலியுறுத்துவதால், புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க முடியவில்லை.
சில மாதங்களில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் முடியும் வரை, குவாரி திறப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த பின், குவாரி திறப்பு குறித்து முடிவு எடுக்கலாம் என அதிகாரி கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், இப்போதைக்கு மணல் குவாரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை. இதனால், வீடு கட்டுவோர் அதிக விலை கொடுத்து, ஆந்திர ஆற்று மணலை வாங்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. – இவ்வாறு அவர்கள் கூறினர்.



































