தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமாகிய லெப்.சீலன் (ஆசீர் – இதயச்சந்திரன்) யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் பேரினவாத சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சில் குண்டுபாய்ந்த வேளையில் எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும், துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் கூறி தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தம்மை சுடுவித்து, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தேசியத் தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலணித் தளபதியான லெப். சீலனின் மறைவிற்குக் காரணமாக விளங்கிய இனத்துரோகி பொன்னையா சுப்பிரமணியம் 04.05.1984 அன்று மீசாலையில் வைத்து தமிழீழவிடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.