மக்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரத்தை உயர்த்துவதே சமூகசக்தி திட்டத்தின் நோக்கம். – அமைச்சர்
அலரி மாளிகை
நாட்டின் மக்களைப் பொருளாதார ரீதியில் வளப்படுத்துவது மாத்திரமன்றி, அவர்களின் கல்வி மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தி ஒரு சிறந்த மனித சமூகத்தை உருவாக்குவதே சமூகசக்தி தேசிய செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (13-01-2026) நடைபெற்ற மேல் மாகாண சமூக அபிவிருத்தி சபைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும் பொருளாதார நீதியை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘கமூகசக்தி’ தேசிய செயற்திட்டத்தினால் இந்தத் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அபிவிருத்திப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:
மக்கள் வளமடைதல் என்பது பொருளாதார ரீதியான வளர்ச்சியை மட்டும் குறிக்காது என சமூகசக்தி தேசிய செயற்திட்டம் கருதுகிறது. எமது பிரதான கவனம் மற்றும் நோக்கம் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதாகும்.
பல்பரிமாண வறுமை என்பது வாழ்க்கைத் தரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அளவுகோளாகும். எனவே, வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் மக்களை வளப்படுத்துவதாகும்.
நாட்டைப் பொருளாதார ரீதியாக உயர்த்துவது போலவே, சமூக ரீதியாக மக்களின் சுகாதார நிலை மற்றும் கல்வியையும் மேம்படுத்த வேண்டும். எமது நாட்டின் மனித வளத்தை மேம்படுத்தாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. அதற்கு கல்வி மிகவும் அவசியமானது. அதேபோல நாட்டின் அபிவிருத்திக்கு ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்க வேண்டும். அதனால்தான் பல்பரிமாண வறுமையை ஒழிப்பது சமூகசக்தி தேசிய செயற்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக்க பண்டாரவும் இங்கு கருத்துத் தெரிவித்தார். சமூகசக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அவசியமான தொழில்நுட்ப விடயங்கள் குறித்து அவர் விரிவாக கருத்து வெளியிட்டார். சமூக அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஒட்டுமொத்த சமூகத்தின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதன் அவசியம், திட்டங்களைச் சரியாக அடையாளம் காண்பது மற்றும் அறிவியல் ரீதியான அடிப்படையில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதம் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் இதன்போது மேலும் தெளிவுபடுத்தினார்.