இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (06-02-2026) பாராளுமன்ற வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“வெறுமனே தொழில்நுட்ப அறிவை வழங்குவதோடு மாத்திரம் நின்றுவிடாது, இளைஞர் சமூகத்தின் மனநல ஆரோக்கியம் மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தி இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

இதன்கீழ், நவீன வசதிகளுடனான விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சுகாதார வசதிகளை நிறுவுதல்; பொழுதுபோக்கு மற்றும் கலைநயமிக்க அனுபவங்களைப் பெறக்கூடிய வகையிலும் மன அமைதி கிடைக்கக்கூடிய வகையிலும் உட்புற மற்றும் வெளிப்புற வளாகங்களை அழகுபடுத்துதல்; ஏனைய கல்வி நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கல்லூரிக்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குதல் ஆகிய விடயங்களில் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே,

நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துவதற்காக 23 தொழில்நுட்பக் கல்லூரிகளின் அபிவிருத்திப் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். இந்த நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்காக முப்படைகளின் மனித வளங்களையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.