இந்தியாவில் இந்தி கற்க இலங்கை குடிமக்களுக்கு அழைப்பு!
கொழும்பு – இலங்கை

இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவிலுள்ள மத்திய ஹிந்தி நிறுவனம் மூலம் ஹிந்தி மொழியை கற்பதற்கு இலங்கை பிரஜைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஹிந்தி மொழியை கற்பதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கல்வி உதவித்தொகையாக திரும்புவதற்கான விமான பயணச்சீட்டு , மாதாந்த உதவித்தொகை , தங்குமிட வசதி மற்றும் வருடாந்த புத்தகக் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படும் எனவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஹிந்தி மொழியை கற்பதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகள் 19 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இது குறித்த மேலதிக விபரங்களை www.hcicolombo.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து முன்கூட்டியே பூர்த்தி செய்து வைத்துக்கொள்ளுமாறு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஹிந்தி மொழியை கற்பதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகள் மார்ச் 9 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம் (இந்திய கலாசார நிலையம்), 16/2, கிரிகோரி வீதி, கொழும்பு 07 இல் இடம்பெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு சமூகம் அளிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது உங்களது கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் ஹிந்தி பயின்றதற்கான சான்றிதழ்களின் பிரதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.