கோவில்களில் இருந்து கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐந்து சுவாமி சிலைகளை, மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்களை மீட்கவும், குற்றவாளிகளை கண்டறியவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில், பல சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம், கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சேர்ந்த திரிசூல மங்கள காளி சிலை, நந்தி சிலை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலுக்கு சேர்ந்த ஆறு தலைகள் உடைய ஸ்கந்த கார்த்திகேயன் சிலை ஆகியவை ஆஸ்திரேலியாவின், கேன்பரா நகரில் உள்ள நேஷனல் கேலரியில் இருப்பது, 2016ல் கண்டறியப்பட்டது.
அதேபோல், 2018ல், கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில், 900 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட நாரீஸ்வரர் கோவிலில் இருந்து, நாயனார் மற்றும் சுந்தரர், பரவை நாச்சியார் சிலை காணாமல் போனது. மேலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலத்துாரில் 12, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த விஸ்வநாதசுவாமி கோவிலில் இருந்து காணாமல் போனதாக, 2017ல் விக்கிரபாண்டியம் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி, சோமாஸ்கந்தர் உள்ளிட்ட சிலைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்மித்சோனியன் நிறுவன நேஷனல் மியூசியம் ஆப் ஏசியன் ஆர்ட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சிலைகளை, பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தப்படி, மத்திய அரசிடம் ஒப்படைக்க, தொடர்புடைய ஏல நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. அச்சிலைகள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் மற்றும் எஸ்.பி., சந்திரசேகரன் பாராட்டினர்.