‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறி வைத்து, அவர்களை அவமதிக்கும் வகையில், தி.மு.க.,வினர் பேசுவது வாடிக்கையாகி விட்டது’ என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன், தி.மு.க., – எம்.பி., கனிமொழி சோமு ஆகியோர், வட மாநிலத்தவரை விமர்சித்து பேசினர். இதை கண்டித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, எண்ணற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், தி.மு.க., அமைச்சர்களும், எம்.பி.,க்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான வெறுப்பை, எவ்வாறு இயல்பாக்குவது என்பதைத் தவிர, வேறு எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
தி.மு.க., – எம்.பி., கனிமொழி சோமு, ஹிந்தி படித்த, 10,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் கஞ்சா, பானிபூரி விற்க, தமிழகத்திற்கு வருவதாக கூறுகிறார். அதே மேடையில், அவருக்கு முன் பேசிய அமைச்சர் அன்பரசனும், அதேபோல், அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஊழல் நிறைந்த தி.மு.க., ஆட்சியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறி வைத்து, இதுபோன்று அவமதிக்கும் வகையில் பேசுவது, வாடிக்கையாகி விட்டது. – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.