ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பல இடங்களில் குண்டுமழை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் அறிவித்துள்ளது. ஈரானும் பதிலுக்கு ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்தியர்கள் செய்திகள் மற்றும் குவைத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தூதரகம் தொடர்ந்து வழக்கம் போல் செயல்படுகிறது. அவசர உதவிக்கு community.kuwait@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். +965 65501946 என்ற தூதரகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமனில் வசிக்கும் இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓமனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
ஏதேனும் அவசர உதவிக்கு, ஓமனில் உள்ள இந்தியர்கள்,
கட்டணமில்லா எண்: 8007 1234
வாட்ஸ்அப் எண்: +968 9828 2270
மின்னஞ்சல்: cw.muscat@mea.gov.in; cons.muscat@mea.gov.in
ஆகியவற்றின் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
