டில்லியில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் புறப்பட்ட ‘இண்டிகோ’ பயணியர் விமானம், மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வான்பரப்பு திடீரென மூடப்பட்டதால், புறப்பட்ட ஏழு மணி நேரத்தில் டில்லிக்கு மீண்டும் திரும்பியது. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதனால், அந்த பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
குறைந்தளவு விமான சேவைகள் இயக்கப்பட்டதால், நம் நாட்டின் ‘ஏர் இந்தியா, இண்டிகோ’ நிறுவனங்களின் விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டன.
இதன்படி, டில்லியில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள மான்செஸ்டருக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6இ033 என்ற விமானம் பயணியருடன் நேற்று புறப்பட்டது. ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அருகே சென்றபோது, மேற்காசிய பிராந்தியத்தில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் வான்பரப்பு திடீரென மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மொத்தம் 11 மணி நேர பயண துாரத்தில், ஏழு மணி நேர பயணத்திற்கு பின்னர் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்ததால், பயணியர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடைசி நேர வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேற்காசிய பிராந்தியத்தில் நிலைமை மாறிக்கொண்டே உள்ளது. இதனால், பயணியரின் பாதுகாப்பை கருதி விமானம் திருப்பி அனுப்பப்பட்டது’ என குறிப்பிட்டுள்ளது.
