வருடாந்த பேரூந்து கட்டணத்துக்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. எரிபொருள் விலை குறைவடைந்தால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (24-03-2026) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எரிபொருள் விலையேற்றத்துக்கமைய பேருந்து கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தவுடன் கட்டணத்தை எம்மால் திருத்தம் செய்ய முடியாது.
கட்டண திருத்தம் தொடர்பில் அறிக்கை பெறப்பட்டு முறையான மதிப்பீடுகளுக்கு அமைவாகவே கட்டண திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். மதிப்பீடு பணிகளை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் ஒருசில தனியார் பேருந்து சங்கத்தினர் பணியில் இருந்து விலகி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கிளார்கள்.
பூகோள நெருக்கடிக்கு மத்தியில் சுயநலமாக சிந்திப்பது முறையற்றது. வருடாந்த பேரூந்து கட்டணத்துக்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.தனியார் பேரூந்து தொழிற்றுறையினருக்கு மாற்று வழிமுறைகளில் நிவாரணம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.