கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை (11-04-2026) இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை அதிகாரிகள் மற்றும் பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 07 பஸ்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் (செயற்பாடு) ஷெரின் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்கள் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலித்துள்ளதோடு, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஷெரின் அத்துகோரல மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பஸ்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்துப் பயணிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் மத்திய பஸ் நிலையம், பெஸ்டியன் மாவத்தை முனையம் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் உங்களுக்காக சட்டப்பூர்வமான போக்குவரத்து வசதிகளை நாம் தயார் செய்துள்ளோம். இவ்வாறான சட்டவிரோத சேவைகளைப் பயன்படுத்துவது உங்கள் உயிருக்கு ஆபத்தையும் பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தும். நேற்று நாம் முன்னெடுத்த சோதனையில் இவ்வாறான 07 பஸ்களைக் கைப்பற்றி பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.