கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் தேரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (27.04.2025) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள். பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும், பலம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும் என பிரித்துப்பார்க்கும் நிலை இனி இருக்காது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் உண்மைகள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. மஹா சங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று ஒருபுறம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எவ்வித பாகுபாடுமின்றி தொடரும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். யாராவது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் சிக்க வைப்போம்.
தற்போது நாடு முழுவதும் தேசிய மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே, கட்டுநாயக்கவில் 110 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருளுடன் சில தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.