காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதிகள் இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்ததுடன், இதன் போது சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த கைதி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
காலி சிறைச்சாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03-05-2026) பிற்பகல் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகளே இவ்வாறு சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.
இதன்போது சுதாரித்துக்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகள், தப்பியோட முயன்ற கைதிகளை மடக்கிப் பிடித்தனர். அந்த முயற்சியின் போது ஒரு கைதி மீது அதிகாரிகள் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் கையில் காயமடைந்த குறித்த சந்தேகநபர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கஜநாயக தெரிவித்தார்.