மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாஜ வெற்றி பெற்றுள்ளது. அசாமில் மீண்டும் பாஜ கூட்டணியே ஆட்சி அமைக்கிறது. கேரளாவில், கம்யூனிஸ்ட் கூட்டணியை காங்கிரஸ் கூட்டணி வீழ்த்தி பத்தாண்டுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது.
மேற்கு வங்க தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் கடும் போட்டி நிலவியது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுதல் காங்கிரஸ், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருப்பதாகவும் பாஜ குற்றம் சாட்டியது.
இதை மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு, தன் நிர்வாகத்தில் தலையிடுவதாக பதிலுக்கு குறை கூறினார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட செயல்பாடுகளையும், மம்தா குற்றம் சாட்டி வந்தார்.
எனினும், அவரது ஆட்சியை காட்டாட்சி என்றும், மக்களுக்கும் , குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி என்றும் பாஜ விமர்சனம் செய்தது. மம்தா ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர், மேற்கு வங்கத்தில் விரிவான பிரசாரம் மேற்கொண்டனர்.
இதன் பயனாக, பாஜ, தனிப்பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது. இந்த வெற்றியை பிரமாண்டமாக கொண்டாட பாஜ இன்று டில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. பாஜ தலைமையகத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சட்டசபை தேர்தல் நடந்த அசாமில் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மூன்றாம் முறையாக தொடர்ந்து பாஜ இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது.
கேரளாவில், பத்தாண்டு இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றுகிறது. ஆட்சியில் இருந்த இடது முன்னணி, குறைந்த தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. புதுச்சேரி தொகுதியில் ரங்கசாமி கட்சி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
இது மட்டுமின்றி, அரசு பணி நியமனம், டெண்டர் உள்ளிட்ட அனைத்திலும், மம்தா கட்சியினர் சரமாரியாக ஊழல் செய்தும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தியிருந்தனர். இதை தேர்தல் பிரசாரத்தில் பாஜ சுட்டிக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.