முல்லைத்தீவு – பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை “தமிழ் இனப் படுகொலைக்கான நினைவுச் சின்னமாக” பாதுகாக்க வேண்டும் என எம்.பி. ரவிகரன் வலியுறுத்துகிறார்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் புதன்கிழமை (03-06-2026) நேற்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தோம்.

குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகம் நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயத்திலும் அதேபோல தவறிழைப்பதற்கு இடமளிக்கமுடியாது என்பதையும் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.

இருப்பினும் வட்டுவாகல் பாலம் இடித்தழிப்புச் செய்கின்ற செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டின் நினைவுச்சின்னமாக வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை விட்டுவைக்குமாறு மக்களாலும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

எனவே வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒருபகுதி தமிழ் இனவழிப்பின் சாட்சியாக பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.

இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவும் கவனம் செலுத்தவேண்டும். இனவழிப்பின் சாட்சியமான பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதியை பேணிப்ப பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் இந்தவிடயத்தில் கவனஞ் செலுத்தத் தவறினால் அவரும் சேர்ந்துதான் எமது தமிழ் இன அழிப்பின் சாட்சியத்தை அழிப்பதாக கருதவேண்டிவரும் – என்றார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க பதிலளிக்கையில், இது ஒரு மனிதாபிமானக் கோரிக்கையாகும்.

இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக பழைய பாலத்தை உடைக்காமல் விடுவதற்கு வாய்ப்பிருக்கின்றதா என்பதை பரிசீலிக்கவேண்டும். குறித்த பழைய வட்டுவாகல் பாலத்தை உடைக்காமல் விடுவதால் நீரோட்டம் தடைப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்பதுதொடர்பில் ஆராயவேண்டுமெனவுந் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நீரோட்டம் தடைப்படும் வகையில் பழையவட்டுவாகல் பாலத்தை விடுமாறு நாம் கோரவில்லை.

தொடக்கப்பகுதி அல்லது, முடிவிடத்தில் பாலப்குதியை நினைவுச்சின்னமாக விடுமாறே நாம் கோருகின்றோம். நிச்சயமாக வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணப்படவேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related posts

இந்திய முதல்வர்களின் சொத்து வெளிப்படுத்தல் பட்டியல் வெளியீடு; தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மூன்றாவது இடத்தில்!

பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!