உ
03.06.2026
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஈழத்தமிழ் உறவுகளுக்கு!
வணக்கம்! நம் ஈழத்தமிழ்ச் சமூகம் வெட்கித் தலைகுனியும்படியாக, பாராளுமன்றத்திலும், சமூகவலைத்தளங்களிலும் பொதுவெளிகளிலும் கருத்து வெளியிட்டு வரும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள், மக்களால் அளிக்கப்பட்ட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, நம் இனம் தலைகுனியும்படியாக மிகவும் தவறான முறையில், பயன்படுத்தி வருகிறார்.
உயர்ந்தவர்களை இழிவுபடுத்தியும், பிரதேச மக்களைக் கேவலப்படுத்தியும், சமூகங்களுக்குள் பகையுணர்ச்சியை தூண்டியும், அண்டை நாட்டு அரசியல் தலைவர்கள் மீது அபாண்டமாகப் பழிகள் சுமத்தியும் நம் நாட்டுத் தலைவர்கள் மேல் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியும், பொது வெளிகளில் பலரும் வெறுக்கும் வண்ணம் இவர் செயற்பட்டு வருகிறார்.
இன நலத்தை விடுத்து தன் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டு வரும் இவர், தனது கண்ணியமற்ற செயற்பாடுகளால் நம் இனத்திற்கான ஓர் தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்கிறார். இவரது செயல்கண்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் வாழுகிற ஈழத்தமிழர்கள் மிக வெறுப்படைந்துள்ளனர்.
இவர் தனது வயிறு வளர்ப்பதற்காக, தானும் ஒரு தேசியவாதி என்பது போல, “பொய்த்தேசியவாதம்” பேசி, மக்களை ஏமாற்றி வருகிறார். ஒழுக்க நெறியிழந்த காவாலிகளும் கூற வெட்கப்படுகின்ற, காதுகளைக் கூசச்செய்யும் ஆபாசமான வார்த்தைகளை மிகச் சாதாரணமாக இவர் பேசுவதைக் கேட்டு, நம் மக்கள் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.
அவர் பாராளுமன்றத்தினுள்ளும் பொதுவெளிகளிலும் பேசுகின்ற விடயங்கள் எங்கள் இனத்தின் மீதான மதிப்பை இன்று கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.
ஒரு காலத்தில் நம் தமிழ்த்தலைவர்களின் தரம் கண்டு, பாராளுமன்றத்திலிருந்த சிங்களத் தலைவர்களே அவர்களை மரியாதை செய்ததாய்க் கூறுவர். இன்று பாராளுமன்ற சிறப்பு உரிமையைப் பயன்படுத்தி கௌரவத்திற்குரிய அச்சபைக்கு அர்ச்சுனா செய்துவரும் அவமரியாதை அளவுகடந்து சென்று கொண்டிருக்கிறது. அவரது செயல்களால் தமிழினம் தலைகுனிந்து நிற்கவேண்டியிருக்கிறது.
இவரை சாவகச்சேரி மக்களே பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாக, பலரும் இன்று பழி சொல்லி வருகிறார்கள்.
உண்மையில் இவருக்குக் கிடைத்த இருபதினாயிரத்துச் சொச்ச வாக்குகளில் ஆறாயிரத்துச் சொச்ச வாக்குகளே சாவகச்சேரி மக்களால் இவருக்கு இடப்பட்டன.
ஆனாலும் சாவகச்சேரி மக்கள்மேல் சொல்லப்பட்டு வரும் அப்பழியினைத் துடைக்க, அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் நான் இம்முயற்சியைச் செயற்படுத்த முனைகிறேன்.
பாராளுமன்றத்திற்கு அனுப்பிய ஒருவரை மீளப்பெறும் அதிகாரம் நமது நாட்டு அரசியல் சட்டத்தில் பதிவாகவில்லை. ஆனாலும் இவர் மீதான ஈழத்தமிழர்களின் வெறுப்பினையும் உடன்பாடின்மையையும் கண்டனத்தினையும் நம் மக்கள் சார்பாக, பாராளுமன்றிற்கும் உலகிற்கும் எடுத்தியம்ப வேண்டிய வேளை வந்துவிட்டது. அதனால்த்தான் இம்முயற்சியை நான் முன்னெடுக்க முனைகிறேன்.
ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என்றும், தவறுதலாக எம்மால் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட இவரை இன்று நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம் என்றும் உலகிற்கும் பாராளுமன்றிற்கும் தெரியப்படுத்தும் முகமாக, என்னால் எழுதப்படும் இவ் அறிக்கையின் கீழ், கையொப்பமிட்டு நமது இனத்தின் மானத்தைக் காக்க முன்வரவேண்டுமென வேண்டி நிற்கிறேன்.
இவரது செயல்கள் தவறானவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கக்கூடிய அனைவரும், ஈழத்தமிழரின் தன்மானத்தை காக்கும் பொருட்டு, பொறுப்புணர்ச்சியோடு இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையொப்பம் இடுவதன் மூலம் எம் கடமையை நிறைவேற்றிக் கொள்வோமாக.
இங்ஙனம்
கம்பநேசன் அருணாசலம் வாசுதேவா