உலகமுள்ளவரை உனக்கு வயது – ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை

ஐயநின் மேனியின் அழகதும்,

நெஞ்சினில்

அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,

அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்

அரவணைக் கின்ற பேரழகும்,

வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்

விரிகின்ற கோபத்தின் அழகும்

விடுதலைக் கானநேர் வீதியை என்றுமே

விட்டறி யாதநின் அழகும்,

பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்

புலியென நிமிர்த்திய அழகும்,

புவியினில் இன்றுள தமிழரின் வாயெல்லாம்

பேசிடும் உன்பெயர் அழகும்

வையகம் உள்ளள வாகுக, அதுவரை

வயதுக் காகுக அழகா.

வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ்

வாசலில் வாழுக தலைவா.

கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.