இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, கடன்சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ – பிரான்சே தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷனொன் கௌலி கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதேவேளை இந்நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை பொருளாதார மீட்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அதன் மீண்டெழும் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவசியமான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (20) ஷனொன் கௌலியை சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ-பிரான்சே, அவரது நியமனத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்து, கடன்சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், இருப்பினும் எந்தவொரு கூட்டு ஒத்துழைப்பின்போதும் நலிவுற்ற சமூகப்பிரிவினரின் நலன்களே முன்னிலைப்படுத்தப்படும் எனவும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.