சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களுக்கு உதவ, முன்னாள் அரசு அதிகாரிகளை, தன்னார்வலர்களாக நியமிக்க, அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. த.வெ.க., சார்பில் தேர்தலில் போட்டியிடுவோரிடம் தபால் மற்றும் நேரடியாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது, நேற்றுடன் முடிந்தது.
விரைவில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிலையில், த.வெ.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவ, தன்னார்வலர்களை நியமிக்க, அக்கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, த.வெ.க. வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களுக்கு, வேட்பு மனு தாக்கல் துவங்கி, அனைத்துவித தேர்தல் செயல்பாடுகளிலும் உதவ, முன்னாள் அரசு அதிகாரிகள், ஊழியர்களை தன்னார்வலர்களாக பணி அமர்த்த, தலைமை முடிவு செய்துள்ளது.
தாக்கல் செய்யும் வேட்பு மனுக்களில் தவறுகள் இடம் பெறாமலிருக்கவும், தேர்தல் கமிஷன் விதிகளை முறையாக கடைப்பிடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.