மதுரையில், நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ‘தமிழகத்தில் நிகழும் இருண்ட ஆட்சியை அகற்றவே பிரதமர் மோடி வந்துள்ளார்’ என, அந்த கூட்டணி யின் கட்சி தலைவர்கள் பேசினர்.
முடக்க நினைத்தனர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., அரசு, குண்டாறு திட்டம், மதுரை விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை முடக்கி வைத்துள்ளது.
தென் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை தந்திருக்கிறோம். ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லுாரிகளை மத்திய அரசின் உதவியோடு பெற்றோம். இன்று தி.மு.க., அரசால் ஒரு மருத்துவ கல்லுாரியை கூட பெற முடியவில்லை.
தி.மு.க., அரசு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தையும் முடக்க நினைத்தது. வலிமையான பாரதம், வளமான தமிழகத்தை உருவாக்க தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
பாலியல் கொடுமை பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன்: தமிழகத்தில், 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது.
துணை முதல்வர் உதயநிதியை முதல்வராக்க இந்த தேர்தலை பயன்படுத்துகின்றனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போட்டியே இந்த தேர்தல்.
முடிசூட்ட திட்டம் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மதுரை என்றாலே பாண்டியர்கள் தான் நினைவுக்கு வருவர். களப்பிரர்களை வீழ்த்தி, மதுரையை மீட்டெடுத்த பாண்டியனாக பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார்.
இருண்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஏழை மக்களை எப்படியாவது விலை கொடுத்து வாங்கி விடலாம்; உதயநிதிக்கு முடிசூட்ட வேண்டும் என, கங்கணம் கட்டிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இந்த ஆட்சியை அகற்ற, பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருப்போம்.
பொய் சொல்கிறார் பா.ம.க., தலைவர் அன்புமணி: தி.மு.க., அரசு எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி ஐந்து ஆண்டுகளில் சமூகநீதியை குழி தோண்டி புதைத்து விட்டது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பலமுறை முதல்வரிடம் நான் கோரிக்கை விடுத்தும், அதை நிறைவேற்ற மறுக்கிறார். கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரமில்லை என, சட்டசபையில் ஸ்டாலின் பொய் சொல்கிறார். இவ்வாறு பேசினர்.
