அரசாங்கம் இம்முறை நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன் நெல்லுக்கான கொள்வனவு விலைகளையும் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04-03-2026) பிரதமரிடமான கேள்வி வேளையின்போது சுசந்தகுமார நவரத்ன எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாடு நெல் 120 ரூபா, சம்பா நெல் 130 ரூபா, கீரி சம்பா நெல் 140 ரூபா என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படுகிறது.
நெல் கொள்வனவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தின் அனைத்து நெற்களஞ்சியசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தர நிர்ணயத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நெல்லை விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. அதேநேரம் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
50,000 மெற்றிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்தும் வகையில் களஞ்சியசாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால் நெல் கொள்வனவு மேலும் அதிகரிக்கும்போது அதனை கருத்திற்கொண்டு அதற்கான நிதியையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
