Tuesday, April 7, 2026

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை நிகழ்ந்த 676 சாலை விபத்துக்களில் 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 comments

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (06.04.2026) இலங்கை மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் ஒரு பேரழிவாக உருவெடுத்துள்ளது. 2024, 2025 ஆம் ஆண்டுகளை விட 2026 ஆம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு மாத்திரம் 2,549 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, இதன்போது 2,721 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அதேபோல் இவ்வருடத்துக்கான தரவுகளுக்கமைய ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 74 இனாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆகவும் அதிகரித்துள்ளது. விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 230 பேர் பாதசாரிகளாவதுடன், 247 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். இது நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். சமீபத்தில் பள்ளேகல பகுதியில் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் மீதுள்ள அன்பினால் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கின்றனர், எனினும் இறுதியில் பிள்ளைகளையே இழக்க நேரிடுகிறது. ஆகையால் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்க வேண்டாம் எனப் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தந்தையும் தாயும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, இடையில் சிறிய பிள்ளையை எவ்வித பாதுகாப்புக் கவசமும் இன்றி வைத்துக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான அன்பு? விபத்து சம்பவிக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமல்லவா?

மேலும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வீதி ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தி வருகின்றன. மதுபோதை, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,291 சாரதிகளும், போதைப்பொருள் பயன்படுத்திய 4,055 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தில் தூரப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பஸ் சாரதிகளுக்கும் உரிய ஓய்வு தேவை.

மேலும், கிராமங்களில் நடத்தப்படும் துவிச்சக்கர வண்டி மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துவோர், முறையான பொலிஸ் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாகப் போட்டியாளர்களின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறான போட்டிகளின் தூரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீதியில் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் அனைவருமே வீதி ஒழுக்கத்தைப் பேணிச் செயற்பட்டால் மாத்திரமே இந்த விபத்துப் பேரழிவைத் தடுக்க முடியும் என்றார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00