Thursday, April 9, 2026

மின் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்த அரசு திட்டம் – இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்

0 comments

ஏப்ரல் மாதத்தில் 11சதவீதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொறு முறை 30 சதவீத மின்கட்டண அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் 41.5 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கிறது. இதில் பாதியான 20.5 பில்லியன் ரூபா தரம் குறைந்த நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08-09-2026) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தரம் குறைந்த நிலக்கரியால் 250 கிகாவோட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளது.. இதை ஈடுசெய்ய டீசல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு 20.5 பில்லியன் ரூபா தேவை . இந்த நஷ்டத்தை நிறுவனங்களிடம் இருந்து அறவிடுவோம் என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், உண்மையில் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களே இதை செலுத்த வேண்டிவரும்.

நாட்டில் 61 இலட்சம் குடும்பங்களில் 25 இலட்சம் குடும்பங்கள் எரிவாயுவைப் பயன்படுத்தி வருகின்றன. இவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. மே மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள 30வீத மின்கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள். டீசல் அலகிற்கு 100 ரூபா வீதம் அறவிடும் திட்டத்தை கைவிட்டு, நஷ்டத்திற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து அதை அறவிட வேண்டும்

இன்று விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட்டவில்லை. பெரும் போக பருவத்தில் ஈர நெல் 85-90 ரூபாவிக்கும், 14வீதமான ஈர நெல் 100-103ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன. 120ரூபா உத்தரவாத விலையைப் அரசாங்கம் பெற்றுத் தருவோம் என தற்போதைய ஆளும் தரப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். 150 ரூபா உத்தரவாத விலையை சட்டமாக்கித் தருவோம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் எந்த ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அரசாங்கம் மின்சார பாவனையாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் நிராதரவாக்கிவிட்டுள்ளது.

உரங்களுக்குச் சலுகை விலைகளைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதிகள் பல வழங்கியிருந்தாலும் யூரியா உள்ளிட்ட உர வகைகளுக்கு தற்போது நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய கிழக்கில் இரண்டு வார போர்நிறுத்தம் காணப்படுவதனால், இந்த தருணத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள், உரம், எரிவாயு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நாம் கூறும் சமயங்களில் தமது அடிமைகளை வைத்து சமூக வலைதளங்களில் சேறு பூசி, கேலி செய்யாமல் அவசரகால மூலோபாய திட்டத்தை வகுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்து காணப்படுகின்றன. மத்திய கிழக்கு யுத்தம் என்ற பெயரில் அதிகரிக்கப்பட்ட எண்ணெய் விலைகளை குறைக்க வேண்டும். அந்த சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுங்கள்

சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மகிழ்ச்சி தெரிவித்தாலும், சுகாதார அமைச்சர், அவர்களினது பிரச்சினைகளை கேட்க வேண்டும். கஷ்ட பிரதேச சேவைக்காக காணப்பட்ட வைத்தியசாலைகள் 393 இலிருந்து 126 ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. கஷ்டப் பிரதேச சேவைக் காலம் 1 வருடம் என்பதை 2 வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்தங்கள் குறித்து ஊழியர்கள் மீது விரல் நீட்டுவது போல், அமைச்சர் மீதும் விரல் நீட்டப்படுவதனால், இது குறித்து அமைச்சர் அவர்களை அழைத்துக் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இடமாற்றக் குழுக்கள் இப்போது அரசியல்மயமாகி பெலவத்தமயமாகி காணப்படுகின்றன

எப்போதும் சொல்வது போல், சேவை நிரந்தரமாக்கப்படாத டெங்கு ஒழிப்பு உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறானோர் 301 பேரளவில் காணப்படுகின்றனர். உடனடியாக இவர்களை பணியில் நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாராளுமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு துன்புறுத்தல் நடந்த சந்தர்ப்பத்தில், உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த குழுவில் வாய்மொழி துன்புறுத்தலே நடந்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதாவது அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு இத்தகைய தொல்லைகள் நேராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00